புதுடெல்லி: கொரோனா ஒருநாள் பாதிப்பு சற்றே குறைந்தாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவிவந்தது. இதில் சிலருக்கு உருமாறிய கொரோனா ஜெஎன்1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்த நிலையில், நேற்று காலை 8 மணிவரையிலான 24 மணி நேரத்தில் 636 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களையும் சேர்த்து, நாட்டில் 4,394 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் 841 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று தொற்றுபரவல் சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் இருவரும், தமிழ்நாட்டில் ஒருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.