தா.பழூர் : தொடர் மழையால் 500 ஏக்கரில் சாகுபடி செய்த எள் பயிர்கள் சேதமடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா அறுவடைக்கு பிந்திய பட்டமாக கோடை பருவத்தில் எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சி பெருமாள் நத்தம், கீழக்குடி காடு, அடிக்காமலை, கோட்டியால், மூர்த்தியான், பனையடி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது பூக்கும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் எள் சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் வேர் அழுகி எள் செடிகள் கருகி வருகிறது.
இந்த போகம் நெல் சாகுபடியை தவிர்த்து எள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் போது சம்பா அறுவடைக்கு பிறகு அரசின் வழிகாட்டுதல்படி எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி செய்திருந்தோம். தொடர் மழையின் காரணமாக எள்ளு பயிர்கள் அழுகி பெருமளவில் சேதம் அடைந்துள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.