நெல்லை: அம்பையில் வழக்கு விசாரணைக்கு வந்தர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் போலீசார் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனிப்பிரிவு ஏட்டுக்கள் விகேபுரம் போகபூமன், கல்லிடை ராஜ்குமார் ஆகியோர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று முன்தினம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்துக்கும், அம்பை. சரக உளவுப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல் நிலைய பணிக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.