Thursday, May 16, 2024
Home » உணவுப் பொருட்கள் திருடியதாக கூறி அடித்துக் கொன்றனர்; ஆதிவாசி வாலிபர் கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள்: கேரளா நீதிமன்றம் தீர்ப்பு

உணவுப் பொருட்கள் திருடியதாக கூறி அடித்துக் கொன்றனர்; ஆதிவாசி வாலிபர் கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள்: கேரளா நீதிமன்றம் தீர்ப்பு

by Neethimaan
  • தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அட்டப்பாடியை சேர்ந்த ஆதிவாசி வாலிபரான மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்று மண்ணார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி சின்டேக்கி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மல்லன். இவரது மனைவி மல்லி. இவர்களது மகன் மது (30). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தால் வீட்டில் தங்குவதில்லை. வீட்டுக்கு அருகே உள்ள காட்டில் ஒரு குகையில் தான் வசித்து வந்தார். இந்தநிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வந்தன. மது தான் திருடுவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சிலர் குகையில் இருந்து மதுவை ஊருக்கு கொண்டு வந்து கட்டிப்போட்டு தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மண்ணார்க்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த உசேன், மரைக்கார், சம்சுதீன், அனீஸ், அபூபக்கர், சித்திக், உபைது, நஜீப், ஜைஜு மோன், ராதாகிருஷ்ணன், சஜீவ், சதீஷ், ஹரிஷ் முனீர் ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என்று உத்தரவிட்டுள்ளது. மற்ற 2 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தீர்ப்பு குறித்து மதுவின் தாய் மல்லி கூறியதாவது: தீர்ப்பு எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இரண்டு பேரை விடுவித்ததை ஏற்க முடியாது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

13 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi