திங்கள்சந்தை: குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு தேவாலயத்தில் உள்ள பங்கு தந்தை அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் பங்கு தந்தை ராபின்சன் (34), திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பங்கு பேரவை துணை தலைவர் ஜஸ்டஸ் ரோக் (58), வின்சென்ட் (60), திருவிதாங்காடு பகுதியை சேர்ந்த விபின் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மைலோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்பாபு என்பவர், நேற்று நாகப்பட்டினம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே முன்னாள் பங்கு தந்தை ராபின்சனை, இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.