சிதம்பரம்: தமிழகம் மற்றும் புதுவைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று காலை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் மற்றும் அன்னைசமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கவர்னர் தமிழிசை உடனிருந்தார். பின்னர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று காலை வந்தார்.
அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்று கனகசபை மீது ஏறி நின்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததையடுத்து, கார் மூலம் பரங்கிப்பேட்டை சென்று அங்குள்ள பாபாஜி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், புவனகிரியில் உள்ள எல்லை அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்தார்.