கொழும்பு: சீனாவின் கடற்படை கப்பல் கொழும்பு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படை பிரிவு சார்பில் 7 உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. அவைகள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. அதே நேரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்திய பெருங்கடல் பகுதியில் இதர நாடுகளுடன் இந்தியா, தனது உறவை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு ஹையாங்க் 24 ஹாவோ என்ற சீன கடற்படை கப்பல் வந்துள்ளது இந்த கப்பல் 129 மீட்டர் நீளம் கொண்டது. கமாண்டர் ஜின் சின் தலைமையில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அந்த கப்பல் இன்று திரும்பி சென்று விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நிருபர்களிடம் கூறுகையில், சீனாவில் இருந்து கொழும்புக்கு கப்பல் வந்திருப்பது தெரியும். அது போர்க்கப்பலா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை. இருப்பினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சீன கப்பலின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீன கப்பலில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் 5 இலங்கையின் தெற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.