சிதம்பரம்: சிதம்பரம் கோவிலில் கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு மறுத்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்சவம் நடைபெற்று வரும் வேளையில், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை விதித்து கடந்த 24ம்தேதி தீட்சிதர்கள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் தீட்சிதர்கள் பதாகைகளை அகற்ற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பதாகையை அகற்ற சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கோயில் செயலாளர் மற்றும் 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் தேர் மற்றும் தரிசனம் முடிவுற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சித்சபைக்கு பிரவேசம் செய்தனர். நேற்று மாலை உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, தாசில்தார் செல்வக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் ஆகியோர் சிதம்பரம் டிஎஸ்பி ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கனகசபை படி வாயிலில் இருந்த அறிவிப்பு பதாகையை ஊழியர்கள் மூலம் அதிரடியாக அகற்றினர். அதன் பின்னர் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
கனகசபையின் கதவை உட்புறமாக பூட்டி தீட்சிதர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் முன்னிலையில் தீட்சிதர்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.