ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பிஜப்பூர் மாவட்டம் கங்களூர் காவல் எல்லைக்கு உட்பட்ட லெந்த்ரா கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சல் கூட்டு எதிர்ப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை 6 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட என்கவுன்டரில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய சிலரை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் இதவரை 41 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 27ம் தேதி பிஜப்பூரில் 6 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பஸ்தர் தொகுதியில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், என்கவுன்டரில் நக்சலைட்கள் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.