புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 9 ஒன்றிய அமைச்சர்கள் உள்பட 54 எம்பிக்களின் பதவி இன்று முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் 54 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திரபிரதான், மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபலா, ராஜீவ்சந்திரசேகர், முரளீதரன், நாராயண் ரானே, எல்.முருகன், பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் எல். முருகன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மன்மோகன்சிங்கின் 33 ஆண்டுகால நாடாளுமன்ற பதவி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அவர் 1991 அக்டோபர் முதல் மாநிலங்களவை பதவி வகித்து வந்தார். தற்போது அந்த இடத்தில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் 91 வயது மன்மோகன்சிங்கின் எம்பி பதவி முடிவுக்கு வந்துள்ளது. அதே போல் 9 ஒன்றிய அமைச்சர்களில் அஸ்வினி வைஷ்ணவ் தவிர மற்ற 8 அமைச்சர்களும் தற்போது நடக்கும் மக்களவை தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சமாஜ்வாடி சார்பில் ஜெயாபச்சன், ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் மனோஜ்குமார் ஜா, காங்கிரஸ் சார்பில் நாசிர் உசேன், பா.ஜ சார்பில் அனில் பலூனி உள்ளிட்டோரும் மீண்டும் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.