Friday, May 17, 2024
Home » சென்னையில் உள்ள 4 பாஸ்போர்ட் அலுவலகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாஸ்போர்ட் விநியோகம் செய்து சாதனை: 20,000க்கும் அதிகமான புகார்களுக்கு தீர்வு; சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தகவல்

சென்னையில் உள்ள 4 பாஸ்போர்ட் அலுவலகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாஸ்போர்ட் விநியோகம் செய்து சாதனை: 20,000க்கும் அதிகமான புகார்களுக்கு தீர்வு; சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தகவல்

by Karthik Yash

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாஸ்போர்டுகள் விநியோகம் செய்யது புதிய சாதனை படைத்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணாசாலை, அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர 13 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து, பின்னர் நேரில் சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். தினந்தோறும் 2,500 முதல் 3000 பேர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கின்றனர். தட்கல் முறையில் தினமும் 200 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்களில் ஏதேனும் குறை இருந்தால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க சற்று காலதாமதமாகும். எனவே, விண்ணப்பதாரர்களின் குறைகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் குறைதீர் மையம் ஏற்படுத்தப்பட்டு பாஸ்போர்ட் ெதாடர்பான சிக்கல்கள் தீர்வு காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து முதல் முறையாக இந்தாண்டு 5 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கோவேந்தன் கூறியதாவது: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இந்தாண்டு 5 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்போர்ட் வழங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு 4.83 லட்சம் பாஸ்போர்டுகள் வழங்கப்பட்டது. மேலும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 5 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்படுகிறது. முன்பு பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு 7 நாள் வரை ஆனது. சென்னை நகர காவல் ஆணையரின் ஒத்துழைப்பால் தற்போது இது 3 நாட்களாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 4.5 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக ஏதாவது தகவல்கள் பெற விரும்பினால் வார வேலை நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் 4 மணி வரை சென்னை அண்ணாசாலை ராய்லா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம். அதேபோல், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிமுதல் மதியம் 1 மணி வரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்அப், டிவிட்டர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தாண்டு 20000க்கும் மேற்பட்ட குறைகளுக்கு சென்னை மண்டல அலுவலகங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

17 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi