திருவள்ளூர்: சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவம், வணிகம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பயணித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து ரயில்களுக்கு மின்சாரம் கடத்தக்கூடிய கொக்கியில் பழுது ஏற்பட்டதால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மார்க்கமின்றி கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்திலும் ரயில் சேவையானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் என நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லக்கூடியவர்கள் இதனை காரணமாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் செல்லாததால் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புறநகர் ரயில் நாள்தோறும் காலதாமதமாகா இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பொன்னேரி ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். எண்ணூர் ரயில் நிலையத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதன் காரணமாகவே நேரடியாக விரைவு ரயில்கள் செல்லக்கூடிய அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தி பயணிகள் கலைந்து சென்றனர். பின்னர் பென்னேரியில் இருந்து ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றனர்.