Wednesday, May 8, 2024
Home » செங்கல்பட்டில் பெண் தவறவிட்ட 15 சவரனை போலீசில் ஒப்படைத்த அரசு மருத்துவனை ஊழியர்கள்: உரிமையாளரிடம் நகைகள் ஒப்படைப்பு

செங்கல்பட்டில் பெண் தவறவிட்ட 15 சவரனை போலீசில் ஒப்படைத்த அரசு மருத்துவனை ஊழியர்கள்: உரிமையாளரிடம் நகைகள் ஒப்படைப்பு

by Karthik Yash

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பெண் தவறவிட்ட 15 சவரன் நகைகளை காவல் நிலையத்தில் அரசு தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், செங்கல்பட்டில் அருகே திருமணியில் உள்ள மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் கள அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து உடன் வேலை செய்த அலுவலர்கள் ரமேஷிற்கு பாராட்டு விழா நடத்தி முடித்து அவரது வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வந்தபோது, சாலையோரம் பை ஒன்று விழுந்து கிடந்தது. இதனைக்கண்ட அரசு அலுவலர்கள் பையை திறந்து பார்த்தனர். அதில் இருந்த ஆரம், செயின் உள்ளிட்ட 15 சவரன் தங்க நகைகளை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேநேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் அவரது உறவினர் ஷீபா நகைப்பை காணாமல் போனதாக கூறி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்போது, அரசு அலுவலர்கள் ஒப்படைத்த பையை போலீசார் காண்பித்தனர்.

இதனைக் கண்ட ஷீபா அது தன்னுடைய நகைப்பை என்றும் அதில் இருந்த நகைகளின் விவரத்தை சரியாக கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையில், ஜனார்த்தனனின் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர், சொந்த ஊரான ஆந்திராவிற்கு செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தபோது நகைப்பையை தவறவிட்டதாக ஷீபா தெரிவித்தார். மீட்கப்பட்ட நகைகள் ஷீபாவிற்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில், செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் ஆகியோர் நகைகளை ஷீபாவிடம் ஒப்படைத்தனர். பெண் தவறவிட்ட நகைகளை ஒப்படைத்த அரசு ஊழியர்களின் நேர்மையை ஜனார்த்தனனின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையினர் பாராட்டினர்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi