Saturday, July 27, 2024
Home » சியர்ஸ் ஷீத்தல்!

சியர்ஸ் ஷீத்தல்!

by Porselvi
Published: Last Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் லோய்தர் கிராமத்தை சேர்ந்தவர் ஷீத்தல் தேவி, தனது அசாத்திய வில்வித்தை திறமையால் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார். வில்வித்தை விளையாட்டில் அசத்தி வரும் ஷீத்தல் தேவிக்கு விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான அர்ஜூன விருது வழங்கப்பட்டுள்ளது. ஃபோகோமிலியா என்ற அரிய வகை நோயின் காரணமாக கைகளே இல்லாமல் பிறந்தவர் ஷீத்தல் தேவி. சிறு வயதில் இருந்தே பல சவால்களை சந்தித்துள்ளார். மன உறுதியால் தனது திறமைகளை வளர்த்து கொண்டு உயரம் தொட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய இளைஞர்கள் நிகழ்ச்சியில் வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் விளையாட்டு உலகில் அறிமுகமானார். முன்னாள் வில்வித்தை வீரரான குல்தீப் வேத்வானின் வழிகாட்டுதலின் கீழ், தனது திறமைகளை மெருகேற்றினார் ஷீத்தல் தேவி. ஆரம்பத்தில் செயற்கை கைகளைப் பொருத்தி அவருக்கு வில்வித்தைப் பயிற்சி கொடுக்கலாம் என்றே முயற்சி எடுத்துள்ளனர் ஷீத்தலின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள்.

ஆனால் ஷீத்தல் உடல் வாகு செயற்கை கைகளுக்கு சரிவராது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் ஷீத்தல் சற்றும் மனம் தளராமல் ‘நான் என் கால்களைக் கொண்டுதான் மரம் ஏறுவேன், என்னுடைய கால்களால் நான் பல தேவைகளை நானே செய்துகொள்கிறேன்’ என தன்னம்பிக்கையுடன் கூறினார். ஷீத்தலின் இந்த வார்த்தைகள் பயிற்சியாளர்களுக்கு ஒரு கண் திறப்பாக அமைய, கால்கள் மூலமே வில்வித்தை செய்யும் பயிற்சியை மேற்கொண்டனர். மேலும் அமெரிக்க வில்வித்தை வீரர் மேட் ஸ்டுட்ஸ்மேன்… கால்களால் வில்வித்தை செய்யும் வீரம். அவர் குறித்தும் நிறைய தகவல்களை திரட்டி ஷீத்தலை தயார் செய்து ஆசிய பாரா ஒலிம்பிக்கிற்கு அனுப்பினர். அங்கே தனது கால்களை பயன்படுத்தி அம்புகளை ஏவும் தனித்துவமான நுட்பத்தின் மூலம் விளையாட்டு உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.அந்தப் போட்டிகளில் ஷீத்தல் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். செக் குடியரசு நாட்டில் நடந்த உலக வில்வித்தை பாரா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கைகள் இன்றி, இந்த சாதனையை எட்டிய முதல் பெண் வில்வித்தை வீராங்கனை என்ற பெருமை ஷீத்தல் தேவியையே சாரும். இந்த வெற்றி அவரை புகழின் உச்சிக்கு மட்டும் கொண்டுசெல்லவில்லை, பாரிஸ் 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும்வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

ஆசிய பாரா கேம்ஸ் 2023 போட்டியிலும் அவரது சாதனை பயணம் தொடர்ந்தது. தனிநபர் பிரிவிலும் கலப்பு குழு பிரிவிலும் இரு தங்கங்கள் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். விளையாட்டு உலகில் அவர் படைத்த தொடர் சாதனைகளின் காரணமாக பல விருதுகள் அளிக்கப்பட்டது. ஆசிய பாராலிம்பிக் கமிட்டியால் ஆண்டின் சிறந்த இளைஞர் தடகள வீரராகவும், ஆண்டின் சிறந்த மகளிர் பாரா வில்வித்தை வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 2023 ஆம் ஆண்டு, பெண்கள் காம்பவுண்ட் பாரா வில்வித்தை போட்டியின் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றார். ஷீத்தல் தேவியின் அசாத்திய பயணம் என்பது சாதனைகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை. பல தடைகளை உடைத்த அவர் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். தற்போது ஷீத்தல் தேவியின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

fifteen + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi