சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் தில்லைவிடங்கன் ஊராட்சி மன்ற தலைவராக சுப்ரவேல், துணைத்தலைவராக கார்த்திகா ரமேஷ் உள்ளனர். ஊராட்சி செயலாளராக பக்கிரிசாமி பணியாற்றினார்.
இந்நிலையில் துணைத்தலைவர் கார்த்திகா ரமேஷ், கலெக்டர் மகாபாரதியிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனது கையெழுத்தை ஊராட்சி காசோலையில் மோசடியாக பயன்படுத்தி ஊராட்சி தலைவர் சுப்ரவேல் பணம் பரிவரித்தனை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக ஊராட்சி செயலாளர் பக்கிரிசாமி இருந்துள்ளார். எனவே 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சீர்காழி வட்டார வளர்ச்சி கூடுதல் அலுவலர் இளங்கோவனுக்கு கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டதில், முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி செயலாளர் பக்கிரிசாமியை சஸ்பெண்ட் செய்து சீர்காழி வட்டார வளர்ச்சி கூடுதல் அலுவலர் இளங்கோவன் உத்தரவிட்டார். ஊராட்சி தலைவர் சுப்ரவேல் எந்த கட்சியையும் சாராதவர். இவர் மீதும் கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.