சென்னை: நிலவில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஆழ்கடலில் கொண்டாடினார். சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் தருண் ஸ்ரீ. இவர், சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தை சேர்ந்தவர்கள் கடலில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றுதல், இந்திய குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் சென்று தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சந்திரயான் – 3 லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனை வரவேற்று பாராட்டும் வகையில் அரவிந்த் தனுஸ்ரீ நேற்று 10 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டர் மாதிரி தயாரித்து, தேசியக்கொடியுடன் அதனை சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கடலில் 45 அடி ஆழத்தில் கொண்டு சென்று இறக்கி, கொண்டாடினார். மேலும், இந்தியாவையும், இஸ்ரோ விஞ்ஞானிகளையும் பாராட்டினார். இவருடன் ஜான், நிஸ்விக், கீர்த்தனா, தாரகை, ஆராதனா உள்ளிட்ட சிறுவர், சிறுமியர்களும் பங்கேற்றனர்.