கடலூர்: கடலூர் துறைமுகத்தில் நூற்றாண்டு கடந்த அரசு உதவி பெறும் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் 113 ஆம் ஆண்டு விழாவிற்கு கடலூர் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதன்மை மதிப்பெண் பெறும் மாணவருக்கு ரூபாய் 10,000, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பிற்கு ரூபாய் 25,000 மதிப்பிலான கம்ப்யூட்டர் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் பங்குத்தந்தை பாஸ்கல் ராஜ், தாளாளர் கிளாரா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நிர்மலா மேரி வரவேற்றார். விழாவில் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி கடலூர் மாவட்டத்தின் நூற்றாண்டை கடந்த முதன்மையான பெண்கள் பள்ளியின் சிறப்புகள் குறித்து புகழாரம் சூட்டி பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, மாமன்ற கவுன்சிலர் பாலசுந்தர், கவிதா ரகுராமன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.