லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல மாஃபியா கும்பல் தலைவனான முக்தார் அன்சாரி கைது செய்யப்பட்டு, பாண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவர் காணொலி காட்சி மூலம் ஆஜராகவில்லை. அதனால் அன்சாரியின் வழக்கறிஞர் ரந்தீர் சிங் சுமன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த மார்ச் 19ம் தேதி இரவு அன்சாரிக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
மூச்சு திணறல் ஏற்பட்டால், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அப்போது சிறை துணை ஜெயிலர் மகேந்திர சிங் என்பவரும் ஆஜரானார். விசாரணையின் போது முக்தார் அன்சாரியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். இவ்விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முக்தார் அன்சாரியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியமாக இருந்ததாக கூறி ஜெயிலர் ஒருவர் மற்றும் இரண்டு துணை ஜெயிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் முக்தார் அன்சாரியின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை நேற்று நள்ளிரவு பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரியின் ஐசியூ பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.