புதுடெல்லி: மும்பையில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான கடன் மோசடி வழக்கில் 13 வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பையில் இயங்கி வரும் ஜிடிஐஎல் இன்ஸ்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் ஜிடிஐஎல் நிறுவனம் 19 வங்கிகளின் கூட்டமைப்புக்கு ரூ.11,263 கோடி நிலுவையில் வைத்துள்ளதாக தெரிய வந்தது. இதில் 13 வங்கிகளின் ரூ.3,224 கோடி நிலுவை தொகையை திரும்ப பெற முயற்சிக்காமல் வங்கியின் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி ஜிடிஐஎல் நிறுவம் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் அண்மையில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஆந்திரா வங்கி, இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் தேனா வங்கி ஆகிய 13 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஜிடிஐஎல் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.