திருச்சி: திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக அண்ணாமலை, திருச்சி அமமுக வேட்பாளர் உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திருச்சி தென்னூர் அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்தது, மக்களுக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் வானவேடிக்கை நடத்தியது, அனுமதியின்றி பேனர் வைத்தது உள்பட 4 பிரிவுகளின்கீழ் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், பாஜ நிர்வாகிகள் ராஜசேகரன், காளீஸ்வரன் உட்பட 700 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.