பூந்தமல்லி: சென்னை போரூரில் இருந்து அய்யப்பன்தாங்கல் பகுதி வரை டிரங்க் சாலையில் மின் இணைப்பு கேபிள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் போரூர் அருகே தோண்டப்பட்டிருந்த 10 அடி பள்ளத்தில் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டு விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் மெட்ரோ பணியாலும், மறுபுறம் சாலையில் மின் இணைப்பு கேபிள் புதைக்கும் பணியாலும் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால் தினமும் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.