சென்னை: செய்யூர் அருகே கார் -வேன் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இசிஆர் சாலையிலிருந்து செய்யூர் வழியாக மதுராந்தகம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்றது. காரை புருஷோத்தமன் (38) ஓட்டினார். குருமூர்த்தி (29), பூவரசன் (38), சக்திவேல் (30) மற்றும் ரகு (32) காரில் பயணம் செய்தனர். இதேபோன்று, உத்திரமேருர் அருகே தொழிற்சாலையில் இருந்து 4 பெண்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று செய்யூர் அருகே சென்று கொண்டிருந்தது. எல்என் புரம் பகுதியில் சென்றபோது கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதின. இதில் கார் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.
இடிபாடுகளில் சிக்கிய காரில் பயணம் செய்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கூக்குரலிட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து, செய்யூர் போலீசார் வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் காரில் பயணம் செய்த 5 பேரில் நான்கு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ரகு என்பவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தில் சிக்கிய வேனில் வந்த 4 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.