சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கு இடையேயான 2 நாள் மல்யுத்த போட்டியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான 2 நாள் மல்யுத்த- 2023 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது, மாநகர தலைமையிட இணை கமிஷனர் கயல்விழி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தலைமையிட துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஆயுதப்படை (மோட்டார் வாகனப்பிரிவு) துணை கமிஷனர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மல்யுத்தம், கை மல்யுத்தம், பளுதூக்குதல், உடல் அழகு, வளு தூக்குதல், குத்துச்சண்டை, கபடி என 7 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை மாநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாடு காவல் விளையாட்டு வீரர்கள், பின்னர் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கான சோதனை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறும் காவலர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும் என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.