புதுடெல்லி: உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘’தங்களது வேட்பாளர்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிடாத அரசியல் கட்சிகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இந்நிலையில், 2023ல் தேர்தல் நடந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, கர்நாடகா, 2022ல் தேர்தல் நடந்த குஜராத், இமாச்சல், உ.பி., உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப், 2021ல் தேர்தல் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகியவற்றில் தங்களது வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிடாமல் போட்டியிட வைத்த கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விதியை மீறிய கட்சிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.