ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஹமாடா பகுதியில் வசிக்கும் தர்ஷத் குமாவத் அவரது மனைவி சீமா குமாவத்தை விவகாரத்து செய்து விட்டார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.5,000 ஜீவானம்சம் தர தர்ஷத்துக்கு ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தர்ஷத் கடந்த 11 மாதங்களாக ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதுதொடர்பான புகாரில் தர்ஷத் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தர்ஷத்தின் உறவினர்கள் 55 ஆயிரம் மதிப்புள்ள 1,2 ரூபாய் நாணயங்களை 7 சாக்குப் பைகளில் வைத்து நீதிமன்றத்துக்கு எடுத்து வந்தனர். சீமாவின் வழக்கறிஞர் இது மனரீதியாக கொடுமைப்படுத்தும் செயல் என கூறி நாணயங்களை ஏற்று கொள்ள மறுப்பு தெரிவித்தார். நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதால் அதனை ஏற்க யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என தர்ஷத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “1,2 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அடுத்த விசாரணையின்போது(ஜூன் 26) நாணயங்களை எண்ணி, 100 ரூபாய் கட்டுகளாக மாற்றி தர வேண்டும்” என்று உத்தரவிட்டது.