சின்னமனூர்: சின்னமனூர் அருகே, 18ம் கால்வாயில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ேதனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளைச் சுற்றியுள்ள மானாவாரி நிலங்களில் பாசன வசதிக்காக 100க்கும் மேற்பட்ட கண்மாய், குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் நிரப்ப வசதியாக, லோயர்கேம்ப் அருகே முல்லைப்பெரியாறு, வைரவன் கால்வாய் பகுதியில் ஷட்டர் மூலம் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, செப்.15ம் தேதி 18ம் கால்வாயில் பாசன நீர் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை அவ்வப்போது தொடர்ந்து பெய்தது. இதனால், இந்தப் பகுதி நீர்நிலைகளில் பரவலாக தண்ணீர் இருந்ததால் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறப்பை தாமதம் செய்தனர். இதையடுத்து கடந்த டிச.18ம் தேதி பாசனநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தேவாரம் வரை வந்து கொண்டிருந்த பதினெட்டாம் கால்வாய் பாசன நீர் தற்போது சில குளங்களில் தண்ணீர் நிறைந்த நிலையில் வற்றிவிட்டது. குறிப்பாக, சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம்-நாகலாபுரம் இடையே செல்லும் பதினெட்டாம் கால்வாயில் மறுகால் பாய்ந்து வந்த நீர் வெயிலின் தாக்கத்தால் தற்போது வற்றிவிட்டது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.