உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மேனல்லூர் கிராமத்தில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர்ராஜன் மற்றும் ரூபிஞானதீபம் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்முருகன், ஆசிரியர் பயிற்றுனர் ராஜேஷ், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஏலவார்குழலிசீதா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மேனல்லூர், காட்டுப்பாக்கம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் அதனால் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து, மேனல்லூர் கிராம அரசு பள்ளிக்கு புதிதாக சேர்ந்த சிறார்களுக்கு நோட்டு புத்தங்கள் வழங்கி இனிப்பு வழங்கி, பூக்கள் கொடுத்து பள்ளிக்கு வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.