Saturday, July 27, 2024
Home » சில்லுன்னு லஸ்ஸி, ஐஸ் மோர்… பிசினஸில் கலக்கும் காதல் ஜோடி!

சில்லுன்னு லஸ்ஸி, ஐஸ் மோர்… பிசினஸில் கலக்கும் காதல் ஜோடி!

by Porselvi

இனி நமக்கெல்லாம் வருடத்தில் இரண்டு மாதங்கள் கூட குளிர்காலம் இருக்காது போல. இதுதான் குளிரா என உணர்வதற்குள் ஜனவரி மாதமே வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கத் துவங்கிவிட்டது. என்கையில் சில்லுன்னு மோர், லஸ்ஸி, ஜூஸ் இவைதான் இந்தியர் களின் பிரதான பானமாகவே பல யுகங்களாக இருந்துவருகிறது. எங்கும் எப்போதும் சுலபமாகக் கிடைக்கும் இந்த மோர், மற்றும் லஸ்ஸியில் எப்படி வித்யாசம் காட்டலாம், இதில் எப்படி பிசினஸ் என யோசித்து அதில் வருமானம் ஈட்டி வருகின்றனர் மதன் – அஸ்வினி மனோகரன் தம்பதியினர்.‘நான் ஐடி, எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு வருடங்கள் வேலையிலும் இருந்தேன். அப்பறம் அப்பாவுடைய டிவி உற்பத்தி பிசினஸிற்கே வந்திட்டோம். அதையே நானும் எடுத்து செய்கிறேன். என் மனைவி அஸ்வினி பல் டாக்டர். எனக்கு சொந்த ஊர் சென்னை, அவங்களுக்கு வேலூர். அவங்க டென் டல் சென்னையிலேதான் படிச்சாங்க. ஒரு காலேஜ் கல்ச்சுரலில் சந்திச்சோம், காதல் திருமணம் எங்களுடையது. எங்களுக்கு ஒரு குட்டி மகள் பெயர் நக்‌ஷத்ரா’தங்களுடைய அறிமுகத்துடன் ஆரம்பித்தனர் மதன் – அஸ்வினி.‘மதன் குங்ஃபூ பாண்டாவுக்கு பெரிய ரசிகர், மேலும் இந்த ஃபுரூட் நிஞ்சா கேம்லாம் விளையாடிட்டே இருப்பார். அதிலிருந்து ‘ஜூஸ் நிஞ்சா’ என்கிற பெயரைப் பிடிச்சார். எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு மோர், லஸ்ஸி விற்பனையாளர் இருக்கார். மத்தவங்க கொடுக்கற மோர், லஸ்ஸி விட அவருடைய லஸ்ஸி, மோர் ரொம்ப வித்யாசமாக, நேச்சுரலா இருக்கும். வெறும் மோராக இல்லாம உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக் கூடிய நிறைய விஷயங்கள் சேர்த்து விற்பார். அதைப் பார்த்துதான் இந்த பிசினஸ் ஐடியா உண்டாச்சு’. அஸ்வினி சொல்லிக்கொண்டிருக்க தொடர்ந்தார் மதன்.

‘முதலில் கொஞ்சம் தயிர், நிறைய தண்ணீர் இந்த கான்செப்ட்டே எங்க கிட்ட கிடையாது. அதனுடன் வல்லாரை, முடக்கத்தான் கீரை, மஞ்சள், கரிசிலாங்கன்னி, புதினா, இஞ்சி, வெள்ளரி இப்படி எல்லாமே சேர்த்து மோர் விற்கறோம். இந்த லஸ்ஸியிலும் கூட எந்த அளவுக்கு நேச்சுரலாக கொடுக்க முடியுமோ கொடுக்கறோம். ஆரம்பத்தில் சென்னையின் சில முக்கியமான இடங்களில் ஸ்டால்கள் அமைச்சோம். பிறகு ஆன்லைன் இன்ஸ்டாகிராம் விற்பனைகளை அதிகரிச்சோம். இப்போ எங்களுக்குன்னு வாடிக்கையான கஸ்டமர்களே நிறைய பேர் இருக்காங்க. சில கார்பரேட் நிகழ்ச்சிகளுக்கே கூட பல்கா புக்கிங் செய்யறாங்க’ எனினும் மதன் -அஸ்வினி ஜோடியின் இந்த பிசினஸிற்கு ஆரம்பத்தில் உறவினர்கள் தெரிந்தவர்கள் என சற்று ஏளனமான பார்வையைத்தான் வீசியிருக்கிறார்கள். ‘ஆக்சுவலி நான் பல் டாக்டர், அவர் ஐடி, எம்.பி.ஏ பட்டதாரி சொந்த பிசினஸ் என இருக்கறதால் ஆரம்பத்தில் படிச்சிட்டு எதுக்கு இந்த மோர் பிசினஸ் நல்லாவா இருக்கு இப்படி சலிப்புடன் கேட்டாங்க. எதையும் நாங்க காதில் போட்டுக்கவே இல்லை. இன்னைக்கு ரூ.80க்கு துவங்கி ரூ. 190 வரையிலும் எங்களுடைய மோர், லஸ்ஸியைத் தேடி வந்து வாங்குகிற கஸ்டமர்கள் இருக்காங்க. எங்களுடைய ஃபேமிலி, அவருடைய பிசினஸ் , என்னுடைய வேலை இதற்கிடையிலேதான் எங்களுடைய ஜூஸ் நிஞ்சா பிசினஸும் செய்கிறோம்’. தங்களுடைய அடுத்த திட்டம் என்ன தொடர்ந்தார் மதன்.

‘நாங்க கடையாகவும் இந்த ஜூஸ் நிஞ்சா பிசினஸை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போவதற்கான முயற்சிகளும் செய்திட்டு இருக்கோம். மேலும் சென்னையின் முக்கியப் பகுதிகளில் கிளைகளும் துவங்கி இதை ஒரு பிராண்டா உருவாக்கலாம் என்கிற பிளானும் இருக்கு. எந்தத் தொழிலும் குறையோ நிறையோ கிடையாது. இன்னும் படிச்சிட்டு சரியான திட்டமிடலுடன் எந்த பிசினஸ் செய்தாலும் மண்ணையும் பொன்னாக்கலாம்’ தன்னம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மதன் – அஸ்வினி தம்பதியர்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

sixteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi