மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு விமான விபத்தில் பலியான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகேஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த மாதம் ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் படை தலைவராக இருந்த எவ்ஜெனி பிரிகேஜின் உள்நாட்டு போரை தொடங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த விமான விபத்தில் எவ்ஜெனி பிரிகேஜின் பலியானார். விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் எவ்ஜெனி பிரிகேஜின் உயிரிழந்தது உறுதியானது.
ஆனால் ரஷ்ய அரசுக்கு எதிராக புரட்சி செய்ததால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பலவேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விமான விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளே புடின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே எவ்ஜெனி பிரிகேஜின் உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறை தோட்டத்தில் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை. எவ்ஜெனி பிரிகேஜின் ஒரு சில உறவினர்கள் மற்றும் வாக்னர் படை வீரர்களுக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.