நாகர்கோவில்: குமரி மாவட்டம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு சார்பதிவாளராக நாகர்கோவில், வடசேரி, கலுங்கடியை சேர்ந்த எம்.தேவராஜ் (தற்போது வயது 66) என்பவர் பணியாற்றி வந்தார். இவரிடம் தெற்கு குண்டலை சேர்ந்த பொன்னம் பெருமாள் என்பவர் ஆரல்வாய்மொழி கிராம சர்வே எண்ணில் வில்லங்க சான்று கேட்டுள்ளார். இதற்கு தேவராஜ் ₹2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி பொன்னம்பெருமாளிடம் இருந்து ₹2 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது, தேவராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த குமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி கோகுலகிருஷ்ணன் தேவராஜூக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 2 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.