சேலம்: சேலம் அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளரும், துணை வேந்தரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானதால், முழுமையாக விசாரணை நடத்துவதற்காக, இம்மாத இறுதியுடன் ஓய்வுபெறவுள்ள தங்கவேலை சஸ்பெண்ட் செய்யுமாறு, துணைவேந்தர் ெஜகநாதனுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை கண்டுகொள்ளாத துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி தங்கவேலுவிற்கு மருத்துவ விடுப்பு வழங்கினார். மேலும், பதிவாளர் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்குமாறு, உயர்கல்வித்துறைக்கு துணைவேந்தர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதேசமயம், நேற்று முன்தினம் பணியில் சேர்ந்த தங்கவேலை சஸ்பெண்ட் செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இந்நிலையில், துணைவேந்தர் ஜெகநாதன் கேட்டிருந்த, தங்கவேல் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நேற்று உயர்கல்வித்துறை செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார். அத்துடன், தங்கவேலை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அறிக்கை அனுப்பி வைக்குமாறு துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த உத்தரவில், ‘‘தாங்கள் கேட்டிருந்த கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் தங்கவேல் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி உடனடியாக தங்கவேலை சஸ்பெண்ட் செய்து, அதன்மீதான நடவடிக்கை குறிப்ைப அனுப்பி வைக்க வேண்டும்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் மாஜி பதிவாளர் தங்கவேல் ஓய்வுபெற உள்ள நிலையில், உயர்கல்வித்துறையின் இந்த உத்தரவு பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.