செங்கம்: விவசாய நிலத்தில் வேலை செய்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த கணவன், மாமனார், மாமியாரும் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி. இவரது கணவர் சீனுவாசன் (55) இவர் பாஜவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு பொறுப்பு வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனுவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பேயாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் (26) என்பவர் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவர்களுடன் ராமஜெயத்தின் தந்தை பெருமாள் (50), தாய் பச்சையம்மாள் (48) ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சீனுவாசன் ராமஜெயத்தின் மனைவியான 22 வயது இளம்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து இளம்பெண் கணவன் ராமஜெயத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது நிலத்தின் உரிமையாளர் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளும்படி கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் வைத்து இளம்பெண்ணை சீனுவாசன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு இளம்பெண்ணின் கணவன் மற்றும் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜ பிரமுகர் சீனுவாசன், அவருக்கு உடந்தையாக இருந்த ராமஜெயம், பெருமாள், மற்றும் பச்சையம்மாள் ஆகியோரை செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.