சென்னை: பள்ளிகரணை மயிலை பாலாஜி நகர், 4வது பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மதனகோபால் (எ) பல்லு மதன் (46). இவர் ‘ஏ’ பிளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் சமீபத்தில் பாஜவில் சேர்ந்தார். தற்போது பாஜ சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி (எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு) தலைவராக இருந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் 15க்கும் மேற்பட்டோர் பல்லு மதனை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், ஆத்திரமடைந்த அவர்கள் அவரது மனைவியை கீழே தள்ளிவிட்டனர், பின்னர், ‘‘உன் கணவனை கொன்று விடுவோம்,’’ என மிரட்டி விட்டு வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிவிட்டு தப்பி சென்றனர். ஆனால் அது வெடிக்கவில்லை.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்தில் கிடந்த பாட்டிலை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 22ந் தேதி இரவு மயிலை பாலாஜி நகரில் பெயிண்டர் பிரசாந்தை(28) கொலை செய்தவர்களுக்கு பல்லு மதன் உதவியதால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் நண்பர்கள் அவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய வந்தார்களா, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.