மதுரை: கூட்டணி முறிந்த நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுக, பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி முறிந்ததாக அதிமுக நேற்று அறிவித்ததை வரவேற்று தமிழ்நாட்டில் பல இடங்களில் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வது என்று முடிவெடுத்த பழனிசாமியை பாராட்டி அதிமுகவினர் மதுரை, சிவகங்கையில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதேபோல் அதிமுக தயவு தங்களுக்கு தேவையில்லை என்று பாஜகவினரும் பதிலுக்கு சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
எடப்பாடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய மானாமதுரை அதிமுக:
மானாமதுரையில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மானாமதுரை அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
தனித்து நின்றால் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது – அதிமுக சுவரொட்டி
தமிழ்நாட்டில் தனித்து நின்றால் பாஜகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என மானாமதுரையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள அதிமுகவிடம் கூட்டணி என்ற பெயரில் பாஜக ஒட்டிக்கொண்டு இருந்ததாக விமர்சனம் செய்துள்ளனர். பாஜகவை விமர்சிக்க கூடாது என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற அறிவிப்பால் தங்களுக்கு செப்டம்பரிலேயே தீபாவளி வந்துவிட்டதாக அதிமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுகவை விமர்சித்து மதுரையில் பாஜகவினர் சுவரொட்டி:
கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுகவை விமர்சித்து மதுரையில் பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மதுரை நகரம் முழுவதும் அதிமுக – பாஜகவினர் மாறி மாறி போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடியை புலிகேசி என வடிவேலுவுடன் ஒப்பிட்டு கேலி செய்து மதுரையில் பாஜக சுவரொட்டி ஒட்டியுள்ளது.
போர்க்குணம் கொண்ட காவி படைகள் இருக்க!
சனாதனம் தாங்கி பிடிக்க மக்கள் இருக்க!
புலிகள் போல் தலைவர்கள் இருக்க!
புலிகேசியின் ஆதரவு எதற்கு? என பாஜகவினர் விமர்சனம் செய்துள்ளனர்.
கூட்டணி முறிந்த நிலையில் போஸ்டர்களின் மூலம் வார்தைப்போர் நிலவி வருகிறது.