குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு முன்விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இரண்டு வாரத்துக்குள் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள், சரணடைவார்களா போன்ற கேள்விகளுக்கு குஜராத் காவல்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தாஹோத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பலராம் மீனா கூறியதாவது;
“அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாகவே குற்றவாளிகளின் சொந்த ஊரான சிங்வாட் வட்டாரம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் சரணடைவது குறித்து காவல்துறைக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலும் காவல்துறை பெறவில்லை. இருப்பினும், குற்றவாளிகள் 11 பேரையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீட்டில் உள்ளனர். சிலர் உறவினர்கள் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.