நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அண்ணாதுரை, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அரசாங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியாகி சிலமணி நேரம் கழித்தும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு தகவல் தெரியவில்லை.
நண்பர்கள் சிலர் செல்போனில் சொன்னபோது, அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்களாம். ஒரு சில நண்பர்களிடம் பெரும் தலைகள் எல்லாம் விருப்பமனு போட்டு காத்திருக்காங்க. விருப்ப மனுவே கொடுக்காத எங்களுக்கு எப்படி சீட்டு கொடுப்பாங்க? என்றும் கேள்வி கேட்டு அதிர வச்சாங்களாம். அதுக்கப்புறம் சுதாரித்துக் கொண்டு கட்சியின் நிறுவனரை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு புறப்பட்டார்களாம்.
முன்னதாக அதிமுகவுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் சேலம், தர்மபுரி தொகுதிகள் எங்களுக்குத்தான் வேண்டும் என்ற கோரிக்கையை பாமக பிரதானமாக முன்வைத்தது. இதில் சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, தர்மபுரியில் கட்சிதலைவரின் மனைவி சவுமியா அன்புமணி அல்லது முன்னாள் எம்பியான செந்தில் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு பாமகவினர் மத்தியில் பரவலாக இருந்தது. இலையுடன் கூட்டணி இல்லை என்பதால் மேற்கண்ட வேட்பாளர்களும் பின் வாங்கிட்டாங்களாம். தாமரையுடன் கூட்டணி வைத்தால் ரிசல்ட் அம்போ தான் என்பதை உணர்ந்த தலைமை ஒப்புக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்று கட்சி நிர்வாகிகளே பேசிக்கொண்டனர்.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக தர்மபுரி நடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு, சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. எது எப்படியோ வேட்பாளரான அரசாங்கத்தை மாத்திட்டாங்க என்று நிர்வாகிகளே ஒருவருக்கொருவர் கலாய்த்து வருகின்றனர்.