சென்னை: வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர், மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன், மஸ்கட், துபாய், அபுதாபி, கோலாலம்பூர், இலங்கை ஆகிய சர்வதேச விமானங்கள் மற்றும் அயோத்தி, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், ராய்ப்பூர், கோவா, கோவை ஆகிய 15 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் 15 வருகை விமானங்களும் நேற்று சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்னைக்கு வந்தன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன என்றனர். இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டது. இதேபோல் நேற்று ஒரே நாளில், சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என 30 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.