சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, செயலி மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அதுபோன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.10,000 பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதத்திற்கு 3 பேரை குலுக்கல் முறையில் அமைச்சர் சிவசங்கர் நேற்று தேர்வு செய்தார். தேர்வான எசக்கி முருகன் (T50959052), சீதா (T51210787) இம்தியாஸ் ஆரிப் (T51655633) ஆகியோருக்கு விரைவில் ரூ.10,000 பரிசு வழங்கப் படும்.