வீரவநல்லூர்: பத்தமடையில் நேற்று நள்ளிரவு அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடி உடைந்தது. பாளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பத்தமடை பறையன்குளம் விலக்கு அருகே வரும்போது சாலையில் டவுசருடன் நின்று கொண்டிருந்த மர்மநபர் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் வி.கே.புரத்தை சேர்ந்த ராஜன் (50) பத்தமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் மீது கல்வீசிய பத்தமடை மங்கையர்கரசி தெருவைச் சேர்ந்த ரமானந்தம் மகன் கவுதம் (24) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.