Saturday, July 27, 2024
Home » ‘அயலான்’ திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

‘அயலான்’ திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

by Suresh

சென்னை: அயலான் திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரித்துள்ள அயலான் திரைப்படம் நாளை வெளியாகிறது. தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பரம் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர். ரகுமான் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நாளை வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ‘எம்.எஸ் சேலஞ்ச்’ என்ற திரைப்பட விளம்பர நிறுவனத்திற்கும் தொழில்ரீதியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

கே.ஆர்.ஜே தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றியதற்கு விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடி தொகையை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து ‘அயலான்’ திரைப்படம் வெளியாகும் முன் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் ‘அயலான்’ திரைப்படம் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததையடுத்து எம். எஸ் சேலஞ்ச் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வேண்டும் எனவும் பணம் செலுத்தவில்லை என்றால் அயலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எம்.எஸ் சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு அயலான் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரூ.50 லட்சம் திரும்ப செலுத்தியது.

மீதமுள்ள ரூ.50 லட்சம் ஏப்ரல் மதம் பத்தாம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

19 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi