செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பொதுமக்கள் தங்கள் வழக்குகளில் சமரசம் செய்ய வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் தனிநபர் வழக்குகள், குடும்ப வழக்குகள், சொத்து வழக்குகள், வாடகை தொடர்பான வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், மின்வாரியம் தொழிலாளர் நலம் உரிமையியல் ஆகிய வழக்குகள் சமரசத்திற்கு உகந்த வழக்குகள். எனவே, இவ்வழக்குகளில் பொதுமக்கள் சமரசம் செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய இப்பேரணி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை பகுதியில் நிறைவடைந்தது. இதில், மாவட்ட கூடுதல் நீதிபதி காயத்ரி, குடும்ப நல நீதிபதி மோகன குமாரி, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, சிறார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, முதன்மை சார்பு நீதிபதி அனுசுயா, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வி, குற்றவியல் நடுவர் நீதிபதி ரீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மஞ்சுளா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் ஸ்டீபன் குமார், சிவக்குமார், செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் பிரேம்குமார் உள்பட சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.