ஏழாயிரம்பண்ணை, ஏப்.30: ஆபத்தான நிலையில் இருக்கும் வல்லம்பட்டி பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடக்கும் புதர்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வல்லம்பட்டி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2014-15ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் பராமரிப்பின்றி அந்த பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதோடு சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே பயணிகள் நிழற்குடை முன்பு உள்ள புதர்களை அகற்றி, சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.