விருதுநகர், ஏப்.30: விருதுநகர் முத்துராமன்பட்டியை சேர்ந்த 20 வயது மாணவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கோழிக்கறி வாங்க சென்ற போது எதிரே வந்த நண்பர் ஒருவருடன் ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு எதிரே உள்ள வீட்டை சேர்ந்த மாரிச்சாமி(29), எதற்கு தெருவுல நின்று ரெம்ப நேரமா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு மாணவர், பேசாமல் போ என கூறியுள்ளார். உடனே மாரிச்சாமி இருவரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து மாரிச்சாமியின் தாய், தந்தையிடம் புகார் தெரிவிக்கலாம் என அவரது வீட்டிற்கு மாணவர் சென்றார். அப்போது மாரிச்சாமி கத்தியை வைத்து மாணவரை குத்த முயன்றுள்ளார். தடுத்த மாணவரின் உள்ளங்கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே மாரிச்சாமி, மாணவரை கொன்று விடுவேன் என மிரட்டி சென்றுவிட்டார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மாணவர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாரிச்சாமியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.