புதுக்கோட்டை, ஏப்.30:புதுக்கோட்டை பகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து பாரதியார் வேடமணிந்து ஆசிரியை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிபவர் யுனைசி கிறிஸ்டி ஜோதி. இவர் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது பல்வேறு வேடங்கள் அணிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிறார். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இவர் ஔவையார் வேடம் அணிந்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பலரிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று ஆசிரியை யுனைசி கிறிஸ்டி ஜோதி பாரதியார் வேடமணிந்த புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையார் குளம் பகுதியில் சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் வீடு வீடாக சென்று தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாடல்கள் மூலம் எடுத்துரைத்து மாணவர்களை அரசு பள்ளியிலும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் சேர்த்து பயன்பெற வேண்டும் என்று கூறி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் கோடை வெயிலில் மாணவர்களை பாதுகாப்பது எப்படி, அவர்களுக்கு எது மாதிரியான உணவுகளை வழங்க வேண்டும் என்பது குறித்தும் பாடல்கள் மூலமும் கும்மியடித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது பலரிடம் வரவேற்பை பெற்றது. மேலும் இதில் மாணவி ஒருவர் கழுத்தில் கோடை வெயிலிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகையை அணிந்து சென்றார்.