ஐடி நிறுவனத்தில் பணிபுரிவோர், வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் என பல தரப்பினரும் தற்போது விவசாயத்தொழிலில் ஆர்வமாக ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்வோம் என்ற சூளுரையோடே வருகிறார்கள். மாறி வரும் உணவுக் கலாச்சாரம், அதனால் பெருகும் நோய்கள் என இன்றைய டிஜிட்டல் உலகின் விளைவுகளை எதிர்கொள்ள இயற்கை வழி வேளாண்மைதான் சிறந்தது என புரிந்தே இந்த விவசாய முறைக்கு வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் நல்ல இயற்கை இடுபொருட்கள் எங்கு கிடைக்கும் என யோசிக்கிறார்கள். இயற்கை இடுபொருட்களுக்கு நாம் அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. நமக்கு எளிதாக கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டே தரமான இடுபொருட்களைத் தயாரிக்கலாம். அந்த வகையில் வேப்பங்கொட்டைக் கரைசல், 3 ஜி கரைசலை நீங்களே தயாரித்து பயன்படுத்தலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல்
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 100 லிட்டர்
சோப்பு – 200 கிராம்
நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ
மெல்லிய மஸ்லின் வகை துணி
(வடிகட்டுவதற்காக).
செய்முறை
தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வெண்டும். இரவு முழுவதும் 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும். இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை 100 லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவீதம் சோப்பு சேர்க்க வேண்டும். எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
3 ஜி கரைசல்
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 1 கிலோ
இஞ்சி – 1 கிலோ
பூண்டு – 1 கிலோ
வசம்பு – தேவையான அளவு
மாட்டுக்கோமியம் – தேவையான அளவு.
செய்முறை
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் மாட்டுக் கோமியத்துடன் கலக்க வேண்டும். இதனோடு வசம்பையும் சேர்க்க வேண்டும். 10 முதல் 15 நாட்கள் வைத்த பிறகு எடுத்து பயன்படுத்தலாம். இதனை அடுப்பில் வைத்து காய்ச்சினால் இரண்டாவது நாளே பயன்படுத்தலாம்.