தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களை மழைக்கால பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம் என்கிறார் வேலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் மணிகண்டன். எந்த பயிர்களில் என்னென்ன முறைகளைக் கையாளலாம் என அவர் பகிர்ந்துகொண்ட சில முக்கிய தகவல்கள் மிகுந்த பயனுள்ளவை.
பசுமைக்குடில்: பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க ேவண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி, உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவும்.
நிழல்வலைக்குடில்: கிழிந்துபோன நிழல் வலைகளை தைத்து சரி செய்யவும். நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பல்லாண்டு பயிர்கள்: மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மரங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையைக் குறைக்கும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் சேர்த்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும்.தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகளைத்தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகளை, காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்குக் குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.
கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். திராட்சைக்கொடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். திராட்சைக்கொடியில் போர்டோக் கலவை பசையினைப் பூச வேண்டும். அதிகப்படியான இலை, தழைகளை கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.
மிளகு: மிளகுத்தோட்டத்தில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். தாங்குச் செடிகளில் நிழலினை ஒழுங்குபடுத்த கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்.
கிராம்பு மற்றும் ஜாதிக்காய்: உரிய வடிகால் வசதி செய்து, காய்ந்துபோன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி நிழலினை ஒழுங்குப்படுத்த வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும். கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்குக் குச்சிகளோடு கயிற்றால் கட்ட வேண்டும்.
கொக்கோ: காய்ந்துபோன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். அதிகப்படியான இலை, தழைகளை கவாத்து செய்தல் வேண்டும். மரத்தின் தண்டுப்பகுதியில் போர்டோக் கலவை தெளிக்க வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்குக் குச்சிகளோடு கயிற்றால் கட்ட வேண்டும்.
ரப்பர்: சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்குக் குச்சிகளோடு கயிற்றால் கட்ட வேண்டும். செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து உள்நோக்கி சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர்பால் வடிக்கும் பகுதியில் பாதுகாப்புப் பூச்சு பூச வேண்டும். மழைப் பாதுகாப்பு கவசம் பயன்படுத்த வேண்டும்.
வருடாந்திர பயிர்கள்
வாழை: காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும்.
மரங்களைச் சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள்: தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு, மஞ்சள் மற்றும் கேரட் போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்.
அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடர்புக்கு:
– மணிகண்டன்
வேலூர் மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு)
– 97875 12020.