திருவனந்தபுரம் : அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. குகையில் வசித்து வந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடம்பில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் மது உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டியிருந்தது.
இந்த வழக்கில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது.இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கில் 129 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். ரத்தீஷ்குமார் தீர்ப்பளித்தார். அட்டப்பாடி மது கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. IPC 304(2) கீழ் ஹுசைன், மரைக்கார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜூமோன், முனீர், சஜீவ், சதீஷ் முனீர் சஜீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜு ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அனீஷ் மற்றும் அப்துல் கரீம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 14 பேருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.