சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வு தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. வரும் 30ம்தேதி வரை இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் அல்லது செட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த ஆண்டு செட் தேர்வுக்கான அறிவிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உட்பட மொத்தம் 43 பாடங்களுக்கான செட் தகுதித்தேர்வு ஜுன் 3ம் தேதி கணினிவழியில் நடத்தப்பட உள்ளது. செட் தேர்வுக்கான பொதுப் பிரிவு கட்டணம் ரூ.2500, பி சி எம், பி சி, டிஎன்சி பிரிவுக்கு ரூ.2000, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணம் ெசலுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பபதிவு இன்று காலை தொடங்கியது. உதவி பேராசிரியர் பணியை விரும்பும் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். வரும் 30ம் தேதி வரை இந்த விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.