தாம்பரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வடமாநில வாலிபர்கள் மற்றும் இளைஞர்கள் தனது குடும்பத்தினருடன் தங்கி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வடமாநில வாலிபர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் இரவு நாகல்கேணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் சிறு சிறு கஞ்சா பொட்டங்கள் இருந்தது. இதனால் 2 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் (23), உபேந்திரகுமார் (26) ஆகிய 2 பேரும், பீகார் மாநிலத்திற்கு செல்லும் வடமாநில வாலிபர்களிடம் பணம் கொடுத்து, மொத்தமாக கஞ்சா வாங்கி வரச்சொல்லி, அதனை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து, அதனை பல்லாவரம், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு புழல் சிறையில் அடைத்தனர்.