திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் நேற்று இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இதனை, பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருக்கழுக்குன்றம் ஆண்டாளம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை மருத்துவருமான குமரன் அமரேசன் மற்றும் ரஞ்சனி குமரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர்.
இம்முகாமில், பொது மருத்துவம், எலும்பு சிகிச்சை மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், தொண்டை வலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தோல் மருத்துவம் என பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி, சத்தியமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், இளங்கோ, சரவணன், சுரேஷ், விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.